ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 4-ம்தேதி தொடங்குகிறது

Published On 2021-11-02 04:57 GMT   |   Update On 2021-11-02 08:13 GMT
திருச்செந்தூர் கோவிலில் 6, 7-ம் திருநாட்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 2-வது ஆண்டாகவும் பக்தர்களின்றி எளிமையாக நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.

7-ம் திருநாளான 10-ந்தேதி (புதன்கிழமை) இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 5 ஆயிரம் பேர் நேரடியாகவும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News