செய்திகள்
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்-பொதுமக்கள் தர்ம அடி
கோவிலுக்கு நடந்து வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அருகில் உள்ள கருமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை புறப்பட்டார். கோவில் அருகே அந்த பெண் நடந்து வந்த போது திடீரென ஒரு வாலிபர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு அருகில் வந்தார்.
பின்னர் பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது பெண்ணிடம் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் வடக்கு போலீசாரிடம் வாலிபரை ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.