ஆன்மிகம்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடந்தபோது எடுத்த படம்

பாடலீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2019-10-30 04:23 GMT   |   Update On 2019-10-30 04:23 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நேற்று அதிகாலை இடம் பெயர்ந்தார். இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. காலை 8.30 மணி அளவில் சங்கு மண்டபத்தில் புனித நீர் கலசங்கள் வைத்து கலச பூஜை நடந்தது. அதன்பிறகு மூல மந்திரம், மாலா மந்திரம், வேத மந்திரம் ஆகியவை முழங்க பரிகார யாகம் நடந்தது.

காலை 11 மணி அளவில் பூர்ணாகுதி, கலச தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்களுடன் ஆலயத்தை வலம் வந்து, குருபகவானுக்கு கலச அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜன் தலைமையிலான குழுவினரும், விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் பரணிகுமார், கோவில் செயல் அலுவலர் சங்கரன் மற்றும் அர்த்தசாம வழிபாட்டு அமைப்பினர் செய்திருந்தனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் கிளைச்சிறை சாலை வீதியில் அமைந்துள்ள வினைதீர்த்த விநாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்தார். இதை முன்னிட்டு காலை 11 மணிக்கு சங்கல்பம், கலச பூஜை, விக்னேஸ்வர பூஜை, கலசஸ்தாபனம், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், காயத்திரி குரு ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News