செய்திகள்
கோப்புபடம்

மதுகுடித்ததை கண்டித்த பெயிண்டருக்கு கத்திக்குத்து - பள்ளி மாணவர் உள்பட 2 சிறுவர்கள் கைது

Published On 2021-10-09 10:39 GMT   |   Update On 2021-10-09 10:39 GMT
காரமடை அருகே மதுகுடித்ததை கண்டித்த பெயிண்டரை கத்தியால் குத்திய பள்ளி மாணவர் உள்பட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

காரமடை:

கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 25). பெயிண்டர். சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் அமர்ந்து கொண்டு மது குடித்துக்கொண்டிருந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் அந்த சிறுவர்களை அழைத்து மது குடிக்க கூடாது என அறிவுரை கூறி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவானந்தத்தின் கழுத்து மற்றும் நெஞ்சில் குத்தினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் காயமடைந்த ஜீவானந்தத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து ஜீவானந்தம் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவர் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News