ஆன்மிகம்
மகாலட்சுமி

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

Published On 2019-11-18 07:53 GMT   |   Update On 2019-11-18 07:53 GMT
நமது வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது.

காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலையில் 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

காலையிலும், மாலையிலும் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக்கூடாது. விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பையை வெளியே போடக் கூடாது.

பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் கூடாது. நெற்றியில் எப்போதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் முன்பு குடும்பத்தலைவி முதலில் தனக்குத் தானே குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். பிறகு வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக் கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் மறக்காமல் பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.
Tags:    

Similar News