செய்திகள்
வெங்காயம் விலை உயர்வு - ஓட்டல்களில் ஆனியன் தோசை 'கட்'
வெங்காய விலை உயர்வு காரணமாக பெங்களுரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் ஆனியன் தோசை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களுர்:
நாட்டில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கும் அதிகமாக விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசு மற்றும் சில மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காய்கறி கடைகளில் உள்ள வெங்காயங்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகரான பெங்களுருவில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் விலை உயர்வு காரணமாக ஆனியன் தோசை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த வி.காமட் என்பவர் கூறுகையில்,’ வெங்காய விலை உயர்வுக்கு தகுந்தவாறு சில பெரிய ஓட்டல்கள் உணவின் விலையை உயர்த்தியுள்ளனர். ஆனால் ,பெரும்பாலான ஓட்டல்கள் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு விலையை உயர்த்தாமல் வெங்காய தோசை போன்ற உணவுகளின் விற்பனையை நிறுத்தி அதன் பயன்பாட்டை குறைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.