செய்திகள்
விஜய் சங்கர் - மனீஷ் பாண்டே

மனீஷ் பாண்டே- விஜய் சங்கருக்கு கேப்டன் வார்னர் பாராட்டு

Published On 2020-10-23 07:19 GMT   |   Update On 2020-10-23 07:19 GMT
ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிறந்த முறையில் பாட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வித்திட்ட மனீஸ்பாண்டே விஜய்சங்கருக்கு கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

துபாய்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. சாம்சன் 36 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 30 ரன்னும் எடுத்தனர்.

ஐதராபாத் தரப்பில் ஜேசன்ஹோல்டர் 3 விக்கெட்டும், விஜய்சங்கர், ரஷித்கான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர் (4 ரன்), பேர்ஸ்டோவ் (10ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் மனீஷ் பாண்டே-விஜய்சங்கர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது. ஐதராபாத் 18.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 146 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

மனீஷ்பாண்டே 83 ரன்னும் (47 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), விஜய்சங்கர் 52 ரன்னும் (51 பந்து, 6 பவுண்டரி) எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

ஐதராபாத் அணி 4-வது (10 ஆட்டம்) வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் 7-வது தோல்வியை (11 ஆட்டம்) சந்தித்தது. வெற்றி குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

இந்த வெற்றி ஒரு அற்புதமான செயல்பாடு. டாசின் போது நான் சேசிங்கை தேர்வு செய்தது பற்றி நீங்கள் கேள்வி எழுப்பலாம். பவர் பிளேவுக்கு பிறகு நாங்கள் அவர்களை கட்டுக்குள் கொண்டுவந்தோம். மொத்தத்தில் நாங்கள் எதிர்பார்த்த விளையாட்டு இதுதான்.

இந்த போட்டியில் நான் ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால் இந்த போட்டி உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சுகளுக்கு எதிராக இருந்தது. இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்ந்திருப்பது கூடுதல் பலமாக இருக்கிறது.

அவரது உயரம், அனுபவம் நல்ல பலன் அளிக்கிறது. அவர் இன்று பேட்டிங் செய்யவில்லை. ஆனாலும் அவர் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

மிடில்-ஆர்டர் வரிசையில் (மனீஷ்பாண்டே-விஜய் சங்கர்) சிறப்பாக விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ரன் இலக்கை அடைய அவர்கள் நல்ல அடித்தளம் அமைப்பார்கள் அல்லது பெரிய ஸ்கோரை திரட்டுவார்கள் என்பதை நிரூபித்து காட்டினார்கள்.

எங்களது அணி அநேகமாக முதலில் பேட்டிங் செய்து இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றிபெறுவதில் சிறந்ததாக இருக்கிறது. ஆனால் கடந்த 2 போட்டிகளின் அடிப்படையில் இந்த ஆட்டத்தில் சேசிங்கை தேர்வு செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறும்போது, ‘நாங்கள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினோம் என்று நினைக்கிறேன். ஆர்ச்சர் தொடக்கத்திலேயே 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். ஆடுகளம் நன்றாக இருந்தது. சில காரணங்களால் அங்கு சிறிது பனியின் தாக்கம் இருந்தது.

ஆர்ச்சரை தொடர்ந்து அவரது 3-வது ஓவரை வீச வைக்க எனது மனதில் எண்ணம் இருந்தது. இது பற்றி சில வீரர்களுடன் கலந்துரையாடினேன். அவரை தொடர்ந்து 3-வது ஓவரை வீச வைத்திருக்க வேண்டும்’ என்றார்.

இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்சின் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.

Tags:    

Similar News