செய்திகள்
ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட காட்சி

வாலிபர் தற்கொலை விவகாரம் - ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2020-11-19 14:34 GMT   |   Update On 2020-11-19 14:34 GMT
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி:

புதுவை ராசுஉடையார்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆனஸ்ட்ராஜ் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆனஸ்ட்ராஜ் தற்கொலைக்கு அந்த பெண்தான் காரணம், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆனஸ்ட்ராஜின் உறவினர்கள் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் அவர்கள் அண்ணா சிலை அருகே திடீர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அவர்களுடன் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, பெரியசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News