செய்திகள்
விண்கலத்துடன் ராக்கெட் சீறிப்பாய்ந்த காட்சி

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம்

Published On 2020-10-03 03:19 GMT   |   Update On 2020-10-03 03:19 GMT
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம், அன்டரேஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
வாஷிங்டன்:

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் நார்த்ரூப் கிரம்மான் நிறுவனத்தின் சிக்னஸ் விண்கலத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலத்தை வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தும் பணி தொடங்கியது.

விர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரம்மானின் அன்டரேஸ் ராக்கெட், விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட தயாரானது. ஆனால், கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு விண்கலம் ஏவப்பட்டது.

9 நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. திங்கட்கிழமை அதிகாலை விண்வெளி நிலையத்தை சென்றடையும்.

விண்வெளியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை, விர்ச்சுவல் கேமரா, கம்ப்யூட்டர் சாதனங்கள், பரிசோதனைக் கருவிகள் என 8,000 பவுண்டுகள் எடை உள்ள பொருட்கள் இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த விண்கலம் டிசம்பர் மாதம் வரை விண்வெளி நிலையத்தில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாத மத்தியில் அங்கிருந்து புறப்பட்டு பூமிக்கு திரும்பும்.
Tags:    

Similar News