செய்திகள்
பெரம்பலூரில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
பெரம்பலூரில் படிக்கட்டில் நின்று எச்சில் துப்பியபோது ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 70). பெரம்பலூர் வந்த இவர் நேற்று மதியம் பெரம்பலூரில் இருந்து பொன்னகரம் சென்ற அரசு டவுன் பஸ்சில் முன்பக்க இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
துறைமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அருகே பஸ் சென்றபோது இருக்கையில் இருந்து எழுந்த பேச்சியம்மாள், முன்புற படிக்கட்டில் நின்று சாலையில் எச்சில் துப்பினார். அப்போது ஓடும் பஸ்சில் இருந்து அவர் கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பஸ்சின் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் கண்டக்டர் சுப்ரமணியன் ஆகியோர் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.