செய்திகள்
நடிகை ராதிகா

சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் - நடிகை ராதிகா

Published On 2021-01-28 14:01 GMT   |   Update On 2021-01-28 14:01 GMT
நான் நடித்து வரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் என ராதிகா சரத்குமார் கூறி உள்ளார்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சசிகுமார், எஸ்.ஆர்.மணி, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் சிங்காரவேலன் வரவேற்று பேசினார். 

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். சரத்குமாரை தொடர்ந்து கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா பேசியதாவது:-

தமிழகத்தில் கொரானா தொற்றால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தனர், அப்போது கட்சியின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களுக்காக சேவையாற்றினர். 

அதேவேளையில் கட்சியின் தலைவரும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தமைக்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

2021-ம் ஆண்டில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும். 2 முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும், வருகிற தேர்தலில் முழுமையாக ஈடுபட உள்ளேன். 

அதற்காக சின்னத்திரையில் நான் நடித்து வரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன். 

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News