திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் ரெயிலில் சிக்கி 2 மான்கள் பலி
திருப்பூர்:
திருப்பூர் வஞ்சிப் பாளையம் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன.இங்குள்ள மான்கள் தண்ணீர் தேவைக்காக அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றன. இந்தநிலையில் நேற்றிரவு அங்கிருந்து வெளியேறிய மான்கள் கூட்டம் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மான்கள் மீது மோதியது. இதில் 2 மான்கள் பலியாகின. இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
திருப்பூர் வஞ்சிப்பாளையம், அவினாசி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான்கள் வாகனங்களில் அடிபட்டும், நாய்களால் கடித்து குதறியும் பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. எனவே மான்கள் வனப் பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.