உள்ளூர் செய்திகள்
பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளியகாட்சி.

ராசிபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-13 10:21 GMT   |   Update On 2022-01-13 10:21 GMT
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராசிபுரம் பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் மேட்டுத் தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது.  

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4.50 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அப்போது பொன் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத மாய் பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

முன்னதாக பொன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. மலர்களால் பொன் வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்டு இருந்தார். 

நீண்ட வரிசையில் பக்தர்கள் முக கவசம் அணிந்து வந்து சாமியை தரிசனம் செய்தனர். ஜனகல்யாண் இயக்கம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் வழங்கப்பட்டன.  சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரும்பு விற்பனை ஜோராக நடந்தது.
Tags:    

Similar News