செய்திகள்
ஆற்காடு பகுதிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்
ஆற்காடு பகுதிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு:
கொரோனா பரவல் 2-ம் அலை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று ஆற்காடு தாசில்தார் காமாட்சி கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆற்காடு அருகே புதுப்பாடி, கடப்பந்தங்கல், சக்கரமல்லூர் ஆகிய இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அந்த நிறுவனங்களில் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வேலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் ஆற்காடு பகுதியில் வந்த ஒரு அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது பயணிகள் முக கவசம் அணியாமல் அரசு விதிகளை பின்பற்றாமல் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கும் அபராதம் விதித்து ரூ.8,400 வசூலிக்கப்பட்டது.