வழிபாடு
திருவிழா

திருவிழா பற்றிய ஓர் தகவல்...

Published On 2022-02-25 09:00 GMT   |   Update On 2022-02-25 09:00 GMT
உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு 12 மாதங்களும் 10 நாட்களுக்கு குறையாமல் திருவிழா நடைபெறும்.
திருவிழா அல்லது உற்சவம் என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது. திருவிழா என்றாலே தனி உற்சாகம் தான் எங்கு பார்த்தாலும் பந்தல்கள், வானவேடிக்கை, வண்ண விளக்குகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கிராமமே களைகட்டி காணப்படும். திருவிழா நாட்களில் மக்கள் எந்த ஊரில் இருந்தாலும் தனது சொந்த ஊருக்கு வந்து திருவிழாக்களை கொண்டாடுவார்கள். திருவிழாவை ஊர்வலம் அல்லது வலம் என்பதே தமிழ் சொல்லாகும். உற்சவம் என்றால் அது பிறமொழி சொல் ஆகும்.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமான மதுரை திருவிழா நகரம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு 12 மாதங்களும் 10 நாட்களுக்கு குறையாமல் திருவிழா நடைபெறும். மேலும் மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவும், தெப்பத்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது.

தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடக்கும். அதன் ஒரு வாரத்திற்கு முன்பாக பூச்சொரிதல் திருவிழா நடக்கும். இந்நிகழ்வே, திருவிழா ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும். பூச்சொரிதல் அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, மணமுள்ள மலர்களைக் கொண்டு வந்து பெண் தெய்வங்கள் முன்பு குவித்து வைத்து வழிபடுவார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோவில், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில், நாகர்கோவில் நாகராஜாகோவில், சுசீந்திரம் தானு மாலையன் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் பல முக்கியமான திருக்கோவில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின் போது, உற்சவர் தேரில் திருக்கோவிலை சுற்றி பவனி வருவார். ஆசியாவிலேயே திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் 2-வது பெரிய தேராக கருதப்படுகின்றது. தை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். உலகிலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது. சித்திரைத் திருவிழா இந்தியாவில் தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டுப்பிறப்பான சித்திரை மாதத்தில் பவுர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும்.

இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதம் இருந்தும், தீ மிதித்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா ஆ‌ண்டு தோறு‌ம் 10 நா‌ட்க‌ள் வெகு ‌‌சிற‌ப்பாக நடைபெறுவது வழ‌க்க‌ம். கா‌ர்‌த்‌திகை‌த் ‌தீப‌த் ‌திரு‌விழா அ‌ன்று மாலை, குன்றுகளைக் கொண்ட அனைத்து சிவ மற்றும் முருகன் கோவில்களில் அக‌ண்ட கா‌ர்‌த்‌திகை ‌தீப‌ம் ஏ‌ற்ற‌ப்படு‌ம். இத்திருவிழா,திருவ‌ண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலுள்ள (குன்றுகள் அல்லாத) சைவ சமயம் மற்றும் வைணவ தலங்களில், பெரிய கார்த்திகை நாளன்று சொக்கப்பனை கொளுத்தப்படும்.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான வசந்த காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, உள்ளிட்ட இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் டோல்யாத்திரை (டெளல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன் மற்றும் பர்சனா நகரங்களில் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத் தலங்களாக இருக்கும் .

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலய திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும், சிறப்பு பிரார்த்தனை கூட்டமும் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாள்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாமியரின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேற்றப்படுகின்றது. தியாக திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்த நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது விசாகம் (இலங்கையில்) வைகாசி மாத பவுர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பவுத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். புத்தர் பிறந்ததும், ஞானோதயம் பெற்றதும் மற்றும் அவர் இயற்கை எய்தியதும் ஒரே நாளாகும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும். கொண்டாட்ட முறைகளில் நாடுகளுக்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
Tags:    

Similar News