வழிபாடு
கடலூர் பாதிரிக்குப்பம் திரவுபதை அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்த போது எடுத்த படம்.

கடலூர் பாதிரிக்குப்பம் திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-03-26 02:46 GMT   |   Update On 2022-03-26 02:46 GMT
கடலூர் பாதிரிக்குப்பம் திரவுபதை அம்மன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. வருகிற 1-ந்தேதி பட்டாபிஷேகத்துடன் விழா முடிகிறது.
கடலூர் பாதிரிக்குப்பத்தில் திரவுபதை அம்மன் உடனுறை தர்மராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் திரவுபதை அம்மன், தர்மராஜா சாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம், கரக திருவிழா நடந்தது. நேற்று சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது.

விழாவை காண பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இது தவிர திடலில் இன்னிசை கச்சேரியும் நடந்ததால், ஏராளமானோர் குவிந்தனர். சாலையோர இருபுறமும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டதால், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கடலூர் - திருவந்திபுரம் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பொதுமக்களும் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஒழுங்குப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றதை பார்க்க முடிந்தது.

விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. வருகிற 1-ந்தேதி பட்டாபிஷேகத்துடன் விழா முடிகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜேஸ்வரன், தக்கார் சுபத்ரா மற்றும் பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News