செய்திகள்
டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளில் 1 மணிநேரத்துக்கு 50 டோக்கன்

Published On 2021-04-20 07:25 GMT   |   Update On 2021-04-20 07:25 GMT
கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இரவு 8 மணியுடன் டோக்கன் வழங்குவதை நிறுத்திவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா பரவிவருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் கடுமையாக் கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படும் சமயங்களில் கடைக்காரர்கள் எவ்வாறு கூட்டத்தை சமாளிப்பது என்பது குறித்தும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் 1 மணிநேரத்துக்கு 50 பேர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கி சரக்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இரவு 8 மணியுடன் டோக்கன் வழங்குவதை நிறுத்திவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து இருந்தால் மட்டுமே மதுபாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும். 2 பேர்களுக்கிடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். ஒரே நேரத்தில் கடையின் உள்ளேயும் 5 பேருக்கு மேல் இருக்க கூடாது என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடை பணியாளர்கள் ஒவ்வொருவரும் முககவசம், கையுறை பயன்படுத்துவதுடன் கிருமி நாசினி திரவத்தை அவ்வப்போது பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கடையின் முன் பகுதியை கிருமிநாசினி திரவம் கொண்டு 2 முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். கடையை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கடையின் முன்பு வாடிக்கையாளர்கள் நிற்பதற்கு வட்டங்கள் வரைந்து இருக்க வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளனர். ஞாயிற்றுக் கிழமை மதுக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு விடும்.

மது பார்கள் இரவு 9 மணிவரை மட்டுமே செயல் படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஊரடங்குக்கு பிறகு மதுக்கடைகள் திறந்த சமயங்களில் போலீஸ் பாதுகாப்பு ஒவ்வொரு கடைகளுக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. போலீசுக்கு பயந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொருவரும் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

அதேபோல் இப்போதும் ஒவ்வொரு கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு தந்தால் மட்டுமே சமூக இடைவெளியை கடை பிடிக்க இயலும் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News