செய்திகள்
விபத்து

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்- 2 வாலிபர்கள் பலி

Published On 2019-10-30 16:38 GMT   |   Update On 2019-10-30 16:38 GMT
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 வாலிபர்கள் பலியாயினர்.
பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த செங்குணம் ஊராட்சி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சிற்றம்பலம். இவரது மகன் அஜித்குமார்(வயது 24). இவர் நாரணமங்கலத்தில் உள்ள ஒரு டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் சென்றுவிட்டு அங்கிருந்து, மீண்டும் செங்குணம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். இதேபோல் எதிரே செங்குணத்தில் இருந்து அன்புகுமார் (25) என்ற பூக்கடை ஊழியர் தனது நண்பர் அருள்குமாருடன்(21) பெரம்பலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சென்னை- திருச்சி நான்கு வழிச்சாலையில் இருந்து செங்குணம் செல்லும் பிரிவு சாலையில் சென்றபோது, அன்புகுமார் மோட்டார் சைக்கிளும், அஜித்குமார் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் அஜித்குமார், அன்புகுமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் படுகாயம் அடைந்த அருள்குமாரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்தில் பலியான அஜித்குமார் மற்றும் அன்புகுமாரின் உடல்களை பெரம்பலூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News