செய்திகள்
போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை

Published On 2020-01-09 04:57 GMT   |   Update On 2020-01-09 10:33 GMT
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் கலெக்டர் வினய் அறிவித்துள்ளார்.
  • ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது.
  • போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மதுரை:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும்.

குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். இதில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், மாடு வளர்ப்போரும் தங்கள் காளைகளுடன் பங்கேற்பார்கள்.

பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு நீச்சல், மண் குத்துதல், ஓட்டப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சத்தான தீவனமும் வழங்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உடல் திறன், மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும் காளைகள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாளை முதல் வருகிற 12-ந்தேதி வரை அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் காளைகளுக்கு உடல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து மதுரை மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ சோதனை சான்றிதழ் அவசியம்.

காளைகள் 120 செ.மீட்டருக்கு அதிகமான உயரம் இருக்க வேண்டும். 3 முதல் 8 வயது வரை உள்ள காளைகளுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். திமில் உள்ள நாட்டினக் காளைகள் மட்டும் களத்தில் அனுமதிக்கப்படும். உடல் தகுதி சான்று பெற வரும் மாடு வளர்ப்போர் ஆதார், ரேசன் கார்டு நகல், காளை புகைப்படம் ஆகியவை கொண்டு வந்தால் பதிவு டோக்கன் வழங்கப்படும் என்றார்.

இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. உயரம், வயது, எடை, ஆரோக்கியம் குறித்து சோதனை செய்யப்பட்டு மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க சான்றிதழ் வழங்கப்படும்.

பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் வினய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை (10-ந் தேதி) அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும், பாலமேடு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு நாளை மறுநாள் (11-ந்தேதி) பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு பெயர் பதிவு செய்யப்படும்.

மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும். அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 18 வயதுடைய வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் 21 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இளைய வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News