செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

Published On 2019-12-05 05:35 GMT   |   Update On 2019-12-05 05:35 GMT
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அரசு தடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘வன்புணர்வுக் கொடுமைகளில்’ ஈடுபடும் கடைந்தெடுத்த கயவர்களிடமிருந்து பெண்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘நிர்பயா’ நிதியில் தமிழ்நாட்டிற்கென அனுமதிக்கப்பட்ட 190 கோடி ரூபாய்த் திட்டங்களில், வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே அ.தி.மு.க. அரசு செலவு செய்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

பெண்களின் பாதுகாப்பிற்கு உயர் முக்கியத்துவம் தராமல், அதிலேயும் கூட புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க. அரசின் அலட்சிய மனப்பான்மைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கோவையில் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட்டு வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாகியிருப்பதும், அதற்கு முன்பு ‘துடியலூர் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், காஞ்சிபுரம் அருகே உள்ள ஆண்டி சிறுவள்ளூரில் இளம்பெண்ணின் மர்ம மரணமும் தாய்மார்களை பெரும் பீதியடைய வைத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க. அரசு உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துப் போக, காவல்துறையை அப்பட்டமாக பயன்படுத்தியதன் விளைவாக, இன்றைக்கு மாநிலத்தில் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

‘2016-17-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட 9.65 கோடி ரூபாய் ‘நிர்பயா’ நிதியினை முழுவதுமாக அ.தி.மு.க. அரசு செலவிடவில்லை’, ‘இந்த நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட 190 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் நிறைவேற்றவில்லை’,

‘பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் இந்த அரசால் தடுக்க முடியவில்லை’ என்பதிலிருந்து; சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் படுதோல்வி நிரூபணமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மாநகராட்சிகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் கொலை நகரங்களாக மாறி வருகின்ற நிலையில், அவை பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற நகரங்களாக, பெண்களை பொறுத்த வரை ‘நரகங்களாக’ மாறி விட்டன என்பது மிகுந்த வேதனைக்குரியது.

காந்தியடிகள் கண்ட ‘நள்ளிரவில்’ அல்ல இன்றைக்கு ‘பட்டப்பகலிலேயே கூட’ ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக நடந்து போக முடியாத அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்து சூழ்ந்திருக்கிறது.

இதையெல்லாம் சுட்டிக்காட்டினால், “ஸ்டாலின் அரசியல் செய்கிறார்” என்று விதண்டாவாதமாக முதல்-அமைச்சர் பேட்டியளிப்பார். ஆனால் பொறுப்புள்ள, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அ.தி.மு.க. அரசின் தவறுகளை ஊழல்களை அலட்சியங்களை, மக்கள் விரோதச் செயல்களை நான் சுட்டிக்காட்டிக் கொண்டு தான் இருப்பேன்.

எத்தனை பொய்கள் சொல்லி, அதன் மூலம் அரசியல் செய்தாலும், முதல்-அமைச்சர் தனது நிர்வாகத் திறமையின்மையை திசை திருப்ப நினைத்தாலும், உண்மை நிலவரத்தை நான் மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன்; தயங்க மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, ‘நிர்பயா’ நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள, பெண்களின் பாதுகாப்பிற்கான 190 கோடி ரூபாய் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த, இவ்வளவுக்கும் பிறகாவது முன்வர வேண்டும் என்று முதல்- அமைச்சர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை, விருப்பு வெறுப்பின்றி, வேண்டியோர் வேண்டாதோர் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல், இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை எவ்வாறேனும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News