திருமங்கலம் அருகே இன்று விபத்து: 3 பேர் பலி
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கல்லுப்பட்டி அருகேயுள்ள சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகை பாண்டியன் (வயது 32), நத்தம்பட்டி காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் ஜெயபாண்டி. இவர்கள் இருவரும் சுப்புலாபுரத்தில் இருந்து அழகாபுரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
அவர்களது மோட்டார் சைக்கிள் இன்று பிற்பகல் திருமங்கலம் அருகேயுள்ள பாறைப்பட்டி வளைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது போடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கேசவன் (வயது 19), எத்தனராஜ் (21) ஆகியோர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த போலீஸ்காரர் கார்த்திகை பாண்டியன், கல்லூரி மாணவர்கள் கேசவன், எத்தனராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ஜெயபாண்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
விபத்து பற்றி அறிந்ததும் கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.