செய்திகள்
சாலை விபத்து

மொரப்பூர் அருகே விபத்தில் போலீஸ்காரர் பலி

Published On 2020-11-30 18:11 GMT   |   Update On 2020-11-30 18:11 GMT
மொரப்பூர் அருகே வாகனம் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள செக்காரப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 31). போலீஸ்காரரான இவர் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி விமல்குமாரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் பயிற்சிக்காக நேற்று முன்தினம் காலை அரூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி வந்தார்.

மொரப்பூர் அருகே உள்ள தம்பிசெட்டிப்பட்டி பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ராஜேஷ்கண்ணா படுகாயமடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சேலம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஷ்கண்ணா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News