இந்தியா
உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகல்!- கவலையில் பாஜக
தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வரும் 14-ம் தேதி அவர் சமாஜ்வாதி கட்சியில் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரை தொடர்ந்து ஐந்து பாஜக எம்.எல்.ஏக்களும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தற்போது மற்றொரு மந்திரி தாரா சிங் சவுகானும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து உத்தரப்பிரதேச தேர்தலை சந்திக்கவுள்ளதாக நேற்று அறிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியில் 13 எம்.எல்.ஏக்கள் வரை இணையவுள்ளதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.