செய்திகள்
நெல்லை அருகே இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
நெல்லை அருகே இளம்பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள புங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கிரேனா (வயது 27). இவருக்கும், உக்கிரன்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி (31) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ராஜபாண்டியின் பெற்றோர் எட்வர்டு, ரூத் ஆகியோர் கிரேனாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்களாம்.
இதையடுத்து கிரேனா தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ராஜபாண்டி, எலிசபெத் என்ற பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிரேனாவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் நெல்லை தாலுகா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார், ராஜபாண்டி, எட்வர்டு, ரூத் மற்றும் எலிசபெத் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.