உள்ளூர் செய்திகள்
பட்டியல் இனத்தவருக்கு பட்டா வழங்க வேண்டும்
வலங்கைமான் அருகே 3 தலைமுறையாக வசித்து வரும் பட்டியல் இனத்தவருக்கு பட்டா வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம், வலங்கைமான் அருகே மூன்று தலைமுறையாக வசித்துவந்த குடும்பங்களை அப்புறப்படுத்தும் பொதுப்பணித்துறை நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்கள் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பாடகச்சேரி கிராமத்தில் சாலையோரத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் பகுதியை அரசின் ஆவணங்களில் மேல ஆதிதிராவிடர் தெரு என அழைக்கப்படும் நிலையில், இவர்களுக்கு தேவையான எந்தவொரு அடிப்படை தேவைகளையும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்து தரவில்லை.
மேலும் முன்னாள் அமைச்சரும், இத்தொகுதி எம்.எல்.ஏ.வுமான காமராஜிடம் இப்பகுதி மக்கள் பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் தற்போது பொதுப்பணித்துறை நிர்வாகம் மேல ஆதிதிராவிடர் தெருவில் உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுத்து வருவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் மன வேதனை தெரிவிக்கின்றனர். எழை எளிய மக்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழக முதல்வர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு மூன்று தலைமுறையாக இப்பகுதியில் வசித்துவரும் எங்களுக்கு பட்டா வழங்கி எங்களது தலைமுறையினை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.