லைஃப்ஸ்டைல்
பெண்ணுக்குள் ஆண்... புதிதாக தோன்றும் மனச்சிக்கல்கள்...

பெண்ணுக்குள் ஆண்... புதிதாக தோன்றும் மனச்சிக்கல்கள்...

Published On 2020-06-19 08:39 GMT   |   Update On 2020-06-19 08:39 GMT
சில பெண்கள் தங்களை ஆண்களாகவே கருதி செயல்படும் சிக்கலான மனநிலைக்கு ஆளாகிறார்கள். அது எதிர்காலத்தில் ‘டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ எனப்படும் மனநிலைக் கோளாறாக மாறிவிடும்.
நெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ பெண்களுக்கு தைரியம் தேவை. அந்த தைரியத்தை அவர்கள் தங்கள் நடை, உடை, செயல்பாட்டில் காட்டவேண்டியது அவசியம்தான். ஆனால் அதில் இன்னொரு பக்கம் சற்று முரண்பாடு கொண்டதாக இருக்கிறது. சில பெண்கள் ஆண்கள் அணிவது போன்ற உடைகளை அணிந்துகொள்கிறார்கள். கூந்தலையும் ஆண்களை போன்று வெட்டிக் கொள்கிறார்கள். ஆண்களோடு தங்கள் நட்புவட்டத்தையும் உருவாக்கிக்கொண்டு, ஆண்களைப்போலவே செயல்படவும் ஆசைப்படுகிறார்கள். இத்தகைய போக்கு ஒரு எல்லைவரை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும் எல்லைமீறும்போது அவர்களுக்கு தாங்கள் பெண் என்பதே மறந்துபோய்விடுகிறது. அப்படி ஒரு சில பெண்கள் தங்களை ஆண்களாகவே கருதி செயல்படும் சிக்கலான மனநிலைக்கு ஆளாகிறார்கள். அது எதிர்காலத்தில் ‘டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ எனப்படும் மனநிலைக் கோளாறாக மாறிவிடும்.

இந்த முரண்பட்ட மனோபாவம் கொண்ட பெண்கள் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளை வகிக்கலாம். தொழில்ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களாக இருப்பார்கள். மாலையில் நேரத்தோடு பணி முடிந்தாலும், இரவு வரை வேலைசெய்துவிட்டு தாமதமாக வீடு திரும்புவார்கள். தான் தாமதமாக வீடு திரும்புவதை பற்றி பெற்றோர் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு அதிக கோபம்வரும். அதோடு இரவு ஷிப்ட்டில் வேலைபார்க்கவும், அடிக்கடி வீடு திரும்பாமல் இருக்கவும் விரும்புவார்கள்.

முதலில் புடவை, சுடிதார், சல்வார் போன்றவைகளை அணியும் அவர்கள் காலப்போக்கில் தங்கள் உடையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆண்களைப்போல் பேண்ட், சட்டை அணிந்துகொள்வார்கள். ஜீன்ஸ் அணிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். கூந்தலையும் குட்டையாக்கிவிடுவார்கள்.

தங்களை ஆண்களை போன்று காட்டிக்கொள்ள இத்தகைய பெண்கள் அதிகமாக மெனக்கெடுவார்கள். சிகரெட், மதுப்பழக்கம்கூட இவர்களிடம் ஏற்படலாம். திமிரான பேச்சு, ஆண்களோடு அதிக சகவாசம் போன்றவைகளும் ஏற்படக்கூடும். பெரும்பாலான நேரத்தை ஆண்களோடுதான் கழிக்க விரும்புவார்கள். அவர்களது உடல்மொழியும் ஆண்களை போன்று மாறிக் கொண்டிருக்கும்.

பெண்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை காட்ட சில ஆண்கள் அதிரடியில் இறங்குவதுண்டு. பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவுகள் ஏற்படும்போது அவர்கள் அதிரடியாக தாக்கி, பெண்களை காப்பாற்றி அவர்கள் மனதில் இடம்பிடிப்பார்கள். அதுபோன்ற செயல்பாடு இந்த டெல்யூஷனல் டிஸ்ஆர்டருக்கு உள்ளான பெண் களிடமும் ஏற்படலாம். தங்களை ஆண்கள்போல் பாவித்துக்கொள்ளும் அவர்கள், பெண்களுக்காக அதிரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு, அவர்களது அன்பை பெறும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இந்த செயல்பாடு சில நேரங்களில் அவர்களுக்கே ஆபத்தாக அமைந்துவிடுவதும் உண்டு. இவர்கள் தங்களை ஆண்கள்போல் பாவித்துக்கொள்வதால், சில நேரங்களில் பெண்களை வசீகரித்து, தங்கள் ஆண்மை மனோ பாவத்தை நிலைநிறுத்த முயற்சிப்பார்கள். அப்போது எதிர் மறையான விளைவுகள் ஏற்பட்டு, அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற முத்திரை குத்தப்படுவதும் உண்டு.

இதனை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, பெண்களிடம் ‘டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ உருவாக என்ன காரணம்? என்ற கேள்வி எழும்.

அதற்கு அந்த பெண்களின் குடும்பமோ, அவர்கள் வசிக்கும் சமூகமோ காரணமாக இருக்கும். எப்படி என்றால், அவளுக்கு நினைவு தெரிந்த காலகட்டத்தில் அவளது பெற்றோர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கலாம். அப்போது அவளது தந்தை யால் தாய் பலமாக தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்திருக்கலாம். தாய் தாக்கப்படும் போதெல்லாம் அழுதுபுரளும் அவள் ‘பெண்ணாக இருந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. எப்போதும் அடிதான் வாங்கிக் கொண்டிருக்க வேண்டியதிருக்கும். ஆணாக இருந்தால்தான் அடிகொடுப்பவராக இருக்க முடியும்’ என்ற கருத்தை மனதில் பதித்து, வளர்ந்த பின்பு தன்னை ஆண்போல் பாவிக்கும் நிலைக்கு வந்திருக்கலாம்.

இன்னும் சில பெண்கள் சிறுவயதில் ஆண்களால் பாலியல் பாதிப்பிற்கோ, வன்முறைக்கோ உள்ளாகியிருக்கலாம். அது அவர்கள் மனதில் தீராத வடுவை உருவாக்கியிருக்கும். அப்போது அவர்கள் ‘பெண்ணாக இருப்பதால்தான் இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படுகிறது. ஆண் போன்று நடந்துகொண்டால்தான் இந்த சமூகத்தில் வாழமுடியும்’ என்ற கருத்தை தங்கள் மனதிற்குள் பதித்துக்கொண்டு இவ்வாறான குணாதிசயங்களை கொண்டவர்களாக ஆகிவிடுவதும் உண்டு.

முரண்பாடு கொண்ட இந்த ஆண் மனோபாவ தாக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகிவிடும் பெண்களுக்கு முதற்கட்டமாக அவர்களது மூளையில் ஏற்பட்டிருக்கும் ரசாயன மாற்றங்களை சீர்செய்ய மாத்திரைகளை மனநல நிபுணர்கள் வழங்குவார்கள். அது ஓரளவு பலன் தந்த பின்பு அவர்களையே அவர்களுக்கு புரியவைக்கும் சைக்கோதெரபி சிகிச்சை அளிப்பார்கள். 
Tags:    

Similar News