செய்திகள்
ஆர்.எஸ்.பாரதி

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் கிடைக்குமா?- தீர்ப்பு ஒத்திவைப்பு

Published On 2020-06-01 07:42 GMT   |   Update On 2020-06-01 07:42 GMT
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை:

தாழ்த்தப்பட்ட மக்களையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக அளித்த புகாரில், திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்படடார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றிய வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.  இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை  தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இடைக்கால ஜாமீன் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று  ஆர்.எஸ்.பாரதி, வழக்கமான ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது.

ஆர்.எஸ்.பாரதி, காவல்துறை மற்றும் புகார்தாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
Tags:    

Similar News