செய்திகள்
பாராலிம்பிக்கில் சாதனை- அவனி லெகாராவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விபத்தால் நிலைகுலையாமல், நாம் அனைவரும் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாய் அவனி லெகாரா ஓங்கி உயர்ந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16வது பாராலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா 2வது பதக்கம் வென்றுள்ளார். ஏற்கனவே தங்கம் வென்ற நிலையில் இன்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவனி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவனி லெகரா பெற்றுள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விபத்தால் நிலைகுலையாமல், நாம் அனைவரும் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாய் அவர் ஓங்கி உயர்ந்துள்ளார். அவரது மகத்தான ஊக்கத்தையும் சாதனையையும் நான் போற்றுகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.