செய்திகள்
தற்கொலை

வெவ்வேறு சம்பவம்: தூய்மை பணியாளர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2021-02-20 14:47 GMT   |   Update On 2021-02-20 14:47 GMT
தேனி அருகே தூய்மை பணியாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 33). மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி முத்துலட்சுமி.

தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வரி கொடுப்பதற்காக முத்துக்குமார் தனது குடும்பத்துடன் வந்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துக்குமார் மது குடிக்க செல்வதாக கூறிவிட்டு, அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் அல்லிநகரம் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல தேனி அல்லிநகரம் சாலிமரத்து தெருவை சேர்ந்தவர் ராஜா (62). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவருடைய மனைவி செல்லம் கண்டித்தார். இதனால், மனமுடைந்த அவர் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News