செய்திகள்
கொலை

திருச்செந்தூரில் விளையாட சென்ற என்ஜினீயர் அடித்துக்கொலை

Published On 2021-07-02 09:48 GMT   |   Update On 2021-07-02 09:48 GMT
திருச்செந்தூரில் விளையாட சென்ற என்ஜினீயர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகன் சிவமுருகன் (வயது 24).

டிப்ளமோ என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த சிவமுருகன் தனது நண்பர்களுடன் திருச்செந்தூர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்திற்கு நேற்று மாலை விளையாட சென்றார்.

மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிவமுருகனின் தாய் அவரது செல்போனுக்கு போன் செய்தார். அப்போது சிவமுருகனின் நண்பர் ஒருவர் போனை எடுத்து அவர் விளையாடி கொண்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்றும் கூறி உள்ளார்.

ஆனால் இரவு 10 மணியை கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவமுருகனின் தம்பி முத்தரசன் அவரை தேடி சென்றார்.

அப்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள சத்துணவு கூடம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிவமுருகன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த அவர் திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிவமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவமுருகனை கொலை செய்தது யார்?. எதற்காக கொலை செய்தனர்?. என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சிவமுருகனுடன் விளையாட சென்ற நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News