செய்திகள்
நாகை ஆரிய நாட்டு தெரு கடற்கரையில் கடல் நீர் குளம்போல் தேங்கி நின்ற காட்சி.

உம்பன் புயல் எதிரொலி - நாகையில், கடல் நீர் வெளியேறியதால் பரபரப்பு

Published On 2020-05-20 12:49 GMT   |   Update On 2020-05-20 12:49 GMT
உம்பன் புயல் எதிரொலியாக நாகையில் கடல் நீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:

வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக இந்த புயல் மையம் கொண்டுள்ளது.

புயல் உருவானதை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த நிலையில் உம்பன் புயல் எதிரொலியாக நாகையில் நேற்று காலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது.

கடல் சீற்றம் படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் கடல் கடுமையான சீற்றத்துடன் காட்சி அளித்தது. கடும் சீற்றம் காரணமாக நாகை ஆரிய நாட்டு தெரு கடற்கரை பகுதியில் கடல் நீர் வெளியேறி குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

குறைந்த தூரம் சென்று மீன்பிடி தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகிறார்கள். உம்பன் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது பைபர் படகுகளை கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 
Tags:    

Similar News