செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் புளியடி தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சங்கீத் (வயது23). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தேரழுந்தூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மூவலூர் சிவன் கோவில் அருகே சென்றபோது நெடுஞ்சாலையின் இடதுபுறம் உள்ள மின் கம்பத்தின் மீது திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சங்கீத் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சங்கீத் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய தந்தை ஜெய்சங்கர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, குத்தாலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.