செய்திகள்
காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2021-08-18 09:27 GMT   |   Update On 2021-08-18 09:27 GMT
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு தேவையான இடவசதி, மின்சார வசதி, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடாதவாறு பாதுகாக்க தார்பாய் வசதி உள்ளதா என்பதை மாவட்ட கலெக்டர் டி.மோகன் கேட்டறிந்தார்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே காணையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் எடையளவு சரியாக உள்ளதா எனவும், நெல் கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணப்பட்டுவாடா உடனுக்குடன் வழங்கப்படுகிறதா என்று அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு தேவையான இடவசதி, மின்சார வசதி, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடாதவாறு பாதுகாக்க தார்பாய் வசதி உள்ளதா என்பதை கேட்டறிந்ததோடு, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் முறையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீனா, விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News