செய்திகள்
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 70). விவசாயி. இவர் சொந்த வேலையாக ஸ்கூட்டரில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூருக்கு சென்றுவிட்டு சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். தவிட்டுப்பாளையம் அருகே காவிரி ஆற்று பாலத்தில் வந்து போது சேலத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுப்புராயன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து சுப்பராயனின் மகள் மலர்க்கன்னி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வரும் பிரீத்தி ஜோசப் ஸ்ரேஸ்தா(44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தரகம்பட்டி அருகே உள்ள குளக்காரன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி காளியப்பன் (27) என்பவர் நேற்று முன்தினம் குளக்காரன்பட்டியிலிருந்து மனைவி மாலதியுடன் மோட்டார் சைக்கிளில் தரகம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். பசுபதிபாளையம் அருகே வந்தபோது, சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த காளியப்பன், மதுரை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.