செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-05-13 11:37 GMT   |   Update On 2019-05-13 11:37 GMT
ஒட்டன்சத்திரம் அருகே வீடுகள் மற்றும் இ-சேவை மையத்தில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகிலேயே சலூன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஜெயவேல் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஜெயவேல் வீட்டுக்கு அருகே குடியிருக்கும் நாச்சாத்தாள் (வயது 65) என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து 3 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சத்திரப்பட்டியில் உள்ள இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த இந்த கொள்ளை குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News