செய்திகள்
தூத்துக்குடி பிரைன்ட்நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்

வரலாறு காணாத வகையில் கொட்டித்தீர்த்த கனமழை- தூத்துக்குடியில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2021-11-26 05:15 GMT   |   Update On 2021-11-26 05:15 GMT
கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தூத்துக்குடி:

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இல்லாத அளவில் காயல்பட்டினத்தில் ஒரேநாளில் 306 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், வைப்பாறு, கோவில்பட்டி, கடம்பூர், கீழ அரசரடி, எட்டயபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளிலும் அதிகனமழை பெய்தது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேரகன் நகர், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் முட்டளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குள்ள 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன்புரத்தில் 4 தெருக்களிலும் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. அமுதா நகர், சிதம்பர நகர், ராஜீவ் நகர், பாரதி நகர், முனியசாமி புரம், ராஜகோபால் நகர், அண்ணா நகர், நிகிலேசன் நகர், சி.என்.டி. காலனி, லூர்தம்மாள்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஆரோக்கியபுரம், டூவிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் விடிய விடிய அவர்கள் கண் விழித்து தூங்க முடியாமல் தவித்தனர். அவர்கள் வேலைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.

காயல்பட்டினத்தில் இடியுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக சுலைமான் நகர், பார்க்கர் காலனி, உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெரு, காட்டு தைக்கா தெரு, அருணாசலபுரம், கொம்புதுரை உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

தொடர்ந்து கொம்புதுரை பகுதியில் வசித்து வந்த மீனவர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். காயல்பட்டினம் பஸ் நிலையம், பொது நூலகம், கால்நடை மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள அச்சம்பாடு கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்த பொருட்களை போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வருவாய் துறையினர் சென்று அங்குள்ளவர்களை மீட்டு அரசு பள்ளியில் தங்க வைத்தனர். கூவை கிணறு, கோமானேரி பகுதியை சேர்ந்தவர்கள் முன்எச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு கழுங்கு விளையில் தங்கவைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் நகரில் முதலூர் ரோடு, இட்டமொழி, பஸ் நிலையம் பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. நடுவக்குறிச்சி பகுதியில் சாலையோரம் உள்ள புளியமரம் மழையால் சாய்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் தவிசயாபுரம், அமுதுண்ணாகுடி சாலையில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவில் அருகே உள்ள கண்மாய் முற்றிலும் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் முட்டளவு தேங்கி நிற்பதால் நோயாளிகளை பார்க்க உறவினர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். இன்று காலை பணிக்கு சென்ற டாக்டர்கள், நர்ஸ்கள் இருசக்கர வாகனங்களில் சென்றபோது தண்ணீரில் மூழ்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.

இதனால் பலர் கார்கள் மூலமும், வாடகை ஆட்டோக்கள் மூலமும் மருத்துவமனைக்கு சென்றனர். இதே போல் பணி முடிந்து திரும்பியவர்களும் இதேபோல் வீடுகளுக்கு சென்றனர்.

கனமழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நேற்று மாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.20 மணிக்கும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

சென்னையில் இருந்து இன்று காலை வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக கீழுர் ரெயில் நிலையத்தில் நிற்கும். ஆனால் இன்று மழை காரணமாக 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கியது.

கனமழை காரணமாக திருச்செந்தூர்- நெல்லை சாலையில் அங்கமங்கலம் பகுதியில் நேற்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர், பொதுப் பணித்துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டவர்கள் விரைந்து சென்று துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இன்று காலை முதல் அங்கு போக்குவரத்து சீரானது.

ஆனால் குரும்பூர்- ஏரல் சாலையில் நேற்று மாலை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஆத்தூரை சுற்றி மாற்று பாதையில் வாகனங்கள் சென்று வருகிறது. குரும்பூர் அருகே உள்ள கடம்பாகுளம் நிரம்பி மறுகால் பாய்வதால் தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது.



திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. கோவில் கிழக்கு பகுதியில் உள்ள கிரி பிரகாரத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது.

ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகா மண்டபத்திற்குள் தண்ணீர் செல்லவில்லை. கோவில் நாழிகிணறு நிறுத்தத்தில் இருந்து கார் செல்ல முடியாத அளவு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் நகர் பகுதியில் உள்ள டி.பி. ரோடு, காமராஜர் சாலை, ரத வீதிகள், சபாபதிபுரம் தெரு, ஜீவா நகர், அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சாலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பகத்சிங் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. உடனடியாக மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., வருவாய் துறையினர், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனால் இன்று திருச்செந்தூர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது.


Tags:    

Similar News