ஆன்மிகம்
திருமலை வசந்த மண்டபத்தில் விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜை
வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்யப்படும். துளசி இலைகளால் மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்வது வழக்கம்.
வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்யப்படும். துளசி இலைகளால் மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஏழுமலையான் கோவிலில் தனுர் மாத இறுதியில் 5 நாட்கள் விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜை நடத்தப்படுகிறது. அதாவது வில்வ இலைகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதன்படி வரும் 14-ந்தேதி வரை மேற்கண்ட பூஜை நடக்கிறது.
விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜை தொடக்க நாளான நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, அனந்த பத்மநாபசாமி ஆகியோரை கோவில் ஊழியர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு பின்னால் உள்ள வசந்த மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு காலை 6 மணியில் இருந்து 6.30 மணிவரை உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி உற்சவர்களுக்கு விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜை, நைவேத்தியம் செய்யப்பட்டது. அதன்பிறகு உற்சவர்களுக்கு தீபாராதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விஷ்ணு வில்வ பத்ரார்ச்சனை பூஜையில் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்ட செயலாளர் ஆச்சாரியா சி.ராஜகோபாலன், அதிகாரி சேஷாத்திரி மற்றும் வேதப்பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.