மாமல்லபுரம்-கல்பாக்கம் இடையே நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் இருந்து வெங்கம்பாக்கம், குன்னத்தூர், மணமை, கடும்பாடி, பூஞ்சேரி, வழித்தடத்தில் மாமல்லபுரம் வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சும், மாமல்லபுரம்- பிராட்வே ஓ.எம்.ஆர் வழித்தட பஸ்சும் கூட்டம் இல்லை என்று காரணம் காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் ஷேர் ஆட்டோக்களில் மட்டுமே பயணம் செய்யும் நிலை இருந்தது. இரவு 7 மணிக்கு மேல் ஆட்டோக்களும் கிடையாது. இதனால் அப்பகுதியில் இருந்து மாமல்லபுரத்திற்கு வேலைக்கு வருவோர் சிரமத்துடன் பயணம் செய்து வந்தனர்.
தற்போது டீசல், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டியும் பஸ் கிடையாது என்பதாலும், ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. நிறுத்தப்பட்ட கல்பாக்கம் பணிமனை தடம் எண் 115, 118, 119, 118, 519 வழித்தட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.