திருமங்கலம் அருகே தேர்தல் விரோதத்தில் தாக்குதல்- 11 பேர் மீது வழக்கு
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள டி.அரசபட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மாரி மற்றும் சுந்தரபாண்டி போட்டியிட்டனர்.
இதில் சுந்தரபாண்டி வெற்றி பெற்றார். இதனால் மாரி ஆத்திரமடைந்து தனது ஆதரவாளர்களுடன் சுந்தரபாண்டி ஆதரவாளர்களுடன் தகராறு செய்தார்.
நேற்று முன்தினம் ஈஸ்வரபாண்டி, காசிமாயன் ஆகிய 2 பேரை மாரியின் ஆதரவாளர்கள் கத்தியால் கீறினர். இந்த நிலையில் நேற்று கந்தி என்பவரையும் தாக்கினர்.
இந்த தாக்குதல் குறித்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஈஸ்வரபாண்டி புகாரின்பேரில் பாண்டிகருப்பு, கண்ணாயிரம், ரமேஷ் உள்பட 4 பேர் மீதும் கந்தி புகாரின்பேரில் சந்தானம், மாரிச்சாமி, சதீஷ், சரத்குமார் உள்பட 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.