உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட செந்தில்குமார்

திருப்பூரில் மோட்டார் சைக்கிள்களை திருடிய பள்ளி ஆசிரியர் கைது

Published On 2022-01-15 08:56 GMT   |   Update On 2022-01-15 08:56 GMT
ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
திருப்பூர்

உடுமலைபேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பல ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் பள்ளி வேலை தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு வழக்கமாக வந்து செல்வார். அவ்வப்போது ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

இந்த நிலையில் சம்பவத்தனறு வழக்கம் போல் அலுவலக பணிக்காக கலெக்டர் அலுவலகத்துக்கு காரில் வந்துள்ளார். அதன்பின்னர் குறைதீர் கூட்ட அரங்குக்கு வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றார். 

அதனைத்தொடர்ந்து ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் பிரதான கிளை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தையும் திருடிச் சென்று பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் திருடிய வாகனத்தை குமரன் சாலையில் உள்ள பேக்கரி முன்பு நிறுத்தி உள்ளார். இதனை அங்கிருந்த வடக்கு வருவாய் ஆய்வாளர் சக்திவேல் பார்த்துள்ளார். வாகனத்தின் எண்ணை பார்த்தபோது, நேற்று முன் தினம் தொலைந்து போன தனது நண்பரின் வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் வாகனத்தை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்டபோது, அவரை கையும், களவுமாக  பிடித்து  விசாரித்தார். 

அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேச, வடக்கு போலீஸாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் சம்பவ இடத்தில் வந்து விசாரித்தனர். அதில் வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். 

ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும்போது, பல்வேறு நாட்களில் வாகனங்களை குறிவைத்து திருடியது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் ஓவிய ஆசிரியர் செந்தில் குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் வேலை பார்க்கும் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.


Tags:    

Similar News