செய்திகள்
யுவராஜ் சிங்

20 ஓவர் போட்டியில் 3 வீரர்கள் இரட்டை சதம் அடிப்பார்கள் - யுவராஜ் சிங்

Published On 2020-02-11 06:37 GMT   |   Update On 2020-02-11 06:37 GMT
20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங். 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடித்து முத்திரை பதித்தார்.

மேலும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 12 பந்தில் அரை சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் சாத்தியமில்லை என்று என்னால் சொல்ல முடியும்.

தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும் போது முடியாதது எதுவுமில்லை. ஆகவே காத்திருப்போம்.. சிறந்ததை எதிர்பார்ப்போம். கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.



இந்த இருவராலும் 20 ஓவர் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க இயலும். அதோடு 3-வது நபராக ரோகித் சர்மாவாலும் இரட்டை சதம் அடிக்க முடியும். இந்த 3 வீரர்களால் இது சாத்தியமானது.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

20 ஓவர் சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மா 4 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் ஆரோன்பிஞ்ச். 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அவர் 172 ரன் குவித்து இருந்தார்.

20 ஓவர் போட்டியில் கிறிஸ்கெய்ல் அதிக பட்சமாக 179 ரன் குவித்து இருந்தார். ஐ.பி.எல். போட்டியில் இந்த ரன்னை எடுத்தார்.
Tags:    

Similar News