வழிபாடு
விருத்தாசலம் மணிமுக்தாற்றில் விருத்தகிரீஸ்வரர் கோவில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றபோது எடுத்த படம்.

விருத்தகிரீஸ்வரருக்கு மாசி மக தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2022-02-18 06:05 GMT   |   Update On 2022-02-18 06:05 GMT
விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜையும், சாமி வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவில் கடந்த 13-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழாவும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக விருத்தாசலம் மணிமுக்தாற்றின் கரையில் அமைந்துள்ள தீர்த்த மண்டபத்தின் அருகே கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் ஆற்றில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்று சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News