செய்திகள்
முககவசம் அணியாத 11 கடைகளின் பணியாளர்களுக்கு அபராதம்
அரியலூரில் முககவசம் அணியாத 11 கடைகளின் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூர்:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் வியாபாரிகள் உள்ளிட்டோரும் இந்த விதிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
முககவசம் அணியாதவர்களுக்கு, வியாபாரிகளுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டதோடு, கடை திறக்கும் நேரம் போன்ற விதிமுறைகள் மீறப்படும் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோதும், முககவசம் அணியாத பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரியலூர் நகரில் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் ஸ்மீத் சைமன், தர்மலிங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ் தலைமையிலான ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் மளிகை கடை, ஜவுளிக்கடை, டீக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் முககவசம் அணியாமல் வேலை பார்த்தனர்.
இதையடுத்து அதிகாரிகள், 11 கடைகளில் பணியாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர். முககவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி ஆகியவைகள் இல்லாத கடைகளுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.