செய்திகள்
கோப்புபடம்

ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமங்களில் பொதுத்தோட்டம் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-09-23 05:21 GMT   |   Update On 2021-09-23 05:21 GMT
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் குழந்தைகள், வளரிளம் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உடுமலை:

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ், ‘கிச்சன் கார்டன்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் இடவசதிக்கு ஏற்ப ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் பயிரிடப்படுகிறது. பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு அறுவடைக்குப்பின் மையத்தில் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. 

அவ்வகையில் உடுமலையில் 143 அங்கன்வாடி மைங்களிலும் மடத்துக்குளத்தில் 77 மையங்களிலும் கிச்சன் கார்டன் அமைக்கப்படுகிறது.

இதேபோல் பொதுமக்களே காய்கறிகளை சாகுபடி செய்து அதன் பலனை அனுபவிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் காய்கறித்தோட்டம் அமைக்கப்படுகிறது. அதன்படி போடிப்பட்டி, வல்லக்குண்டாபுரம் ஆகிய பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது.

இதுகுறித்து, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள், வளரிளம் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் வாயிலாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

இதற்காக வீடுகளிலும் ஊராட்சிக்குச் சொந்தமான இடங்களிலும் சிறு காய்கறி, கீரைத்தோட்டங்கள் அமைக்க மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். 

நகர்ப்புறங்களில் மாடித்தோட்டம் அமைக்க ஆலோசனை அளிக்கப்படுகிறது. இதற்கு தேவையான விதைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மண்டல வாரியாக கிராமங்கள் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அங்கன்வாடிகள் வாயிலாக இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் ஊட்டச்சத்துகளின் தேவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் இத்திட்டம் குறித்து மக்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News