செய்திகள்
கொலை

பாலக்காட்டில் மனைவியை கொன்று பெயிண்டர் தற்கொலை

Published On 2019-10-04 06:15 GMT   |   Update On 2019-10-04 05:37 GMT
பாலக்காட்டில் மனைவியை வெட்டிக்கொன்று பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செருபுழச்சேரி அருகே உள்ள பேங்காட்ரியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 33). பெயிண்டர். இவரது மனைவி ரஞ்சிஷா (23). நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

திடீரென சந்தோஷ் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றார். சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது ரஞ்சிஷா கழுத்து, வயிறு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பயங்கர வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன், இன்ஸ்பெக்டர் பிரமோத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சந்தோசை தேடியபோது அவர் முண்டாடனம் என்ற இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடும்ப பிரச்சினையால் மனைவியை வெட்டிக்கொன்று விட்டு சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News