செய்திகள்
கொள்ளை

திருமங்கலத்தில் ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-10-06 11:42 GMT   |   Update On 2019-10-06 11:42 GMT
திருமங்கலத்தில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருமங்கலம்:

திருமங்கலம் ராகுல் நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது44). இவர் வீரப்பெருமாள்புரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய தாயாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனவே சசிகுமார், அவரது மனைவி இளவேனில் ஆகியோர் இரவு மருத்துவ மனையில் தங்கி விட்டனர்.

இன்று காலையில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு சசிகுமார் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமங்கலம் காமராஜர் வடபகுதி, ராகுல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால் இந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை முடுக்கி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News