செய்திகள்
திண்டுக்கல் அருகே விபத்தில் வடமாநில தொழிலாளி பலி
திண்டுக்கல் அருகே விபத்தில் வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டம், கோச்ரா பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் பிரதான் (வயது 26). இவர் வேல்வார்கோட்டை பிரிவு அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தன்னுடன் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலம், பர்கார்க் மாவட்டம், சர்சாரா பகுதியை சேர்ந்த மனோஜ் பத்ரா (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடமதுரையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அதன் பின்னர் இருவரும் மீண்டும் வேல்வார்கோட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அவினாஷ் பிரதான் ஓட்டினார். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே சென்றபோது திடீரென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவினாஷ் பிரதான் பரிதாபமாக உயிரிழந்தார். மனோஜ் பத்ரா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.