செய்திகள்
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கனை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியபோது

அமெரிக்க மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு - இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்த முயற்சி

Published On 2021-05-29 19:00 GMT   |   Update On 2021-05-29 19:00 GMT
அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் இந்தியாவில் இருந்து ஒரு கேபினட் மந்திரி அங்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்
வாஷிங்டன்:

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அந்த நாட்டின் உதவியுடன் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்த முயற்சி எடுத்துள்ளார்.

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் இந்தியாவில் இருந்து ஒரு கேபினட் மந்திரி அங்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வாஷிங்டனில் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை ஜெய்சங்கர் 27-ந் தேதி சந்தித்து பேசினார். கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்பு கூட்டை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர்.

அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கனை அவர் வாஷிங்டனில் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார்.

கொரோனா தொற்று பிரச்சினை, தடுப்பூசி விவகாரம், பிராந்திய விஷயங்கள், மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு, ஆப்கானிஸ்தானுக்கான உதவிகள், பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்களில் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்பட பல விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், வர்த்தக பிரதிநிதி கேதரின் டாய், உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் ஆகியோரையும் ஜெய்சங்கர் சந்தித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புகள் குறித்து ஜெய்சங்கர் இந்திய நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய நிர்வாகத்துடனான உறவில் முதன்மையான கவனம் செலுத்துவதுதான் எனது பயணத்தின் நோக்கம் ஆகும். அமெரிக்க உறவு மிக முக்கியமானது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான தடுப்பூசி கூட்டு பற்றியும் பேசினேன். தடுப்பூசி குறித்த குவாட் (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா கூட்டமைப்பு) அடிப்படையிலும் கலந்துரையாடினோம்.

கொரோனா தொற்று, தடுப்பூசி ஆகியவை பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பிடித்தது. அமெரிக்காவின் உதவியுடன் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான முயற்சிதான் இதுவாகும்.

கொரோனாவுடன் என்ன நடக்கிறது என்பதில் நிறைய வர்த்தக ஆர்வம் உள்ளது. கொரோனா எவ்வாறு நகர்கிறது, இது பொருளாதாரத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி பேசினோம். இந்தியாவில் முதலீடு செய்துள்ள மற்றும் ஊழியர்களைக் கொண்டுள்ள நிறைய பேருக்கு இது முக்கியமானது.

கொரோனாவின் 2-வது அலையின்போது, அமெரிக்கா காட்டியுள்ள வலுவான ஒற்றுமைக்கு நமது பாராட்டுகளைத் தெரிவிப்பதும், தடுப்பூசி உற்பத்தியில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதும் முக்கியமானதாக இருந்தது. வினியோக சங்கிலி அடிப்படையில் தடுப்பூசிகளுக்கு அமெரிக்கா மிகவும் இன்றியமையாதது. அமெரிக்காவில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவது, தடுப்பூசிகளின் பல்வேறு அம்சங்கள், ஒழுங்குமுறை அம்சங்கள் முதல் சட்ட மற்றும் வர்த்தக ரீதியிலானவை குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வினியோகச்சங்கிலி சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு நிறைய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. லண்டனில் இருந்தபோது இது குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனிபிளிங்கனுடன் விரிவாக விவாதித்தேன். கடந்த 2, 3 வாரங்களாக வினியோகச்சங்கிலி சுமுகமாக இயங்குகிறது. இதில் சில அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தலையீடுகளால் ஏற்பட்டன.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அனுமதிக்கபபடுகிற தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் நமது விருப்பத்தை சுட்டிக்காட்டினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News