ஆன்மிகம்
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது

Published On 2021-11-18 07:00 GMT   |   Update On 2021-11-18 07:00 GMT
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. அம்மனின் அருளைப்பெற பெண்கள் பலர் இருமுடி கட்டி விரதம் இருந்து சக்குளத்துகாவு அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

இந்த கோவிலில் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் தேவியின் இஷ்ட நிவேத்யமான பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவது சிறப்பாகும். பிரசித்திப்பெற்ற இந்த பொங்கல் வழிபாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவை கேரள கலாசார துறை மந்திரி சஜி செரியான் தொடங்கி வைக்கிறார்

கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய முதன்மை பூசாரி ராதாகிருஷ்ணன் திருமேனி காலை 10.30 மணிக்கு சுப முகூர்த்த வேளையில் தீயை மூட்டி தொடங்கி வைப்பார். அப்போது கருடன் கோவிலை வட்டமடித்து செல்லும். அதை தொடர்ந்து லட்சணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில தீயை மூட்டி பொங்கலிடுவார்கள்.

பிற்பகல் 1 மணிக்கு மற்ற கீழ் சாந்தி மார் தட்டங்களை எடுத்துச் சென்று நிவேத்ய தீர்த்தம் தெளிப்பார்கள். பொங்கல் விழாவை முன்னிட்டு, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலுக்கு கூடுதலாக அரசுபஸ்கள் இயக்கப்படும். இந்த விழாவில் கோவில் முக்கிய காரிய தரிசி மணிக்குட்டன் திருமேனி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
Tags:    

Similar News