செய்திகள்
ராமநாதபுரம் அருகே சாதிசான்றிதழ் வழங்கக்கோரி பெண்கள் திடீர் தர்ணா
சாதிசான்றிதழ் வழங்கக்கோரி காட்டுநாயக்கர் இன பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர் தங்கி உள்ளனர். இவர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் இதர பணிகளுக்காக சாதி சான்றிதழ் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதுவரை இதற்கான குழு ஆய்வு செய்து சாதி சான்றிதழ் வழங்கவில்லை. இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்துவிடுவதாக கூறி சாதி சான்றிதழ் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாகம்பிரியாள் என்பவர் கூறியதாவது:- காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த எங்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கவில்லை. மற்ற மாவட்டங்களில் வழங்கி அவர்களின் குழந்தைகள் கல்வி உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
இதுநாள்வரை தொடக்கப்பள்ளியில் சாதிசான்றிதழ் இல்லாமல் படித்து வந்த நிலையில் தற்போது மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க செல்லும்போது சாதிசான்றிதழ் இருந்தால்தான் சேர்க்க முடியும் என்று கூறுகின்றனர். மேலும் தற்போது, தொடக்கப்பள்ளியிலும் சேர்க்க சாதிசான்றிதழ் கேட்கின்றனர். இதனால் எங்களின் குழத்தொழிலை கைவிட்டு படித்து சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்றாலும் அது முடியாமல் போகிறது. சாதி சான்றிதழ் இல்லாமல் எங்களின் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கல்விகற்க உடனடியாக சாதிசான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.